ஒரு வாசகனின் எண்ணச்சிதறல்கள்

A Blog By Dineshsanth

சுஜாதாவின் புதிய பக்கங்கள்-திருத்தங்கள் தேவை

சுஜாதாவின் புதிய பக்கங்கள் - சுஜாதா

சுஜாதா எனக்கு பிடித்த கட்டுரையாளர்களில் ஒருவர்.பல்வேறுபட்ட விடயங்களை தொகுத்து எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லும் ஆற்றலுடையவர்.அவர் கணையாழியின் இறுதிப்பக்கங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாற்பது கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்நூலும் ஒரு வாசகன் என்ற அடிப்படையில் என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கின்றது.வழக்கம் போல பல சுவாரசியமான விடயங்களை தொகுத்துக் கட்டுரைகளாக்கியிருக்கின்றார் சுஜாதா.இந்நூலில் சுஜாதா சிபாரிசு செய்திருக்கும் கவிதைகளில் பல மிக அருமையாக இருந்த போதும் அவரால் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் எவையும் என்னைக் கவரவில்லை.மரபுக்கவிதைகள் தொடர்பான தொடர் விளக்கங்களையும் எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருந்தால் நூல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
3.5/5 கொடுக்கலாம்.

ஆதவன் சிறுகதைகள்-ஒரு இலக்கிய அறுசுவை விருந்து

ஆதவன் சிறுகதைகள் - ஆதவன்

நான் வாசித்த ஆதவனின் முதலாவது சிறுகதை நிழல்கள்.எழுத்தாளர் அசோகமித்ரனால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் மேற்கூறிய கதை இடம்பெற்றிருந்தது.அந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது என்று கூறமுடியாவிட்டாலும் ஆதவனின் எழுத்து நடை எனக்கு பிடித்திருந்தது.ஆதவன் சிறுகதைகளை வாசிப்பதற்கு இருநாட்கள் முன்பு நடந்த சம்பவம் இது.ஆதவன் சிறுகதைகள் நூலில் முதலாவதாக இருந்த கதை "முதலில் இரவு வரும்".கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது கல்கியின் எழுத்துக்கள் என்னை எவ்வளவு பிரமிக்கவைத்ததோ அதற்கு சற்றும் குறையாத பிரமிப்பு அந்தக் கதையை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது.எப்படி இவரால் மட்டும் மனித உணர்வுகளை இவ்வளவு உயிரோட்டமாகவும் அழுத்தம் சற்றும் குறையாமலும் வார்த்தைகளில் வடிக்க முடிகின்றது? என்ற பிரமிப்புத் தான் அது.அந்த ஒரு கதையிலேயே ஆதவனின் எழுத்துக்களால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டேன்.கதையின் இறுதியில் ராஜாராமன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சியை வாசிக்கையில் என் கண்களின் ஓரங்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன.நான் இதுவரை வாசித்த கதைகளில் என்னை அதிகம் பாதித்த கதை "முதலில் இரவு வரும்" தான்.இதைத் தவிர "அப்பர் பெர்த்","சிவப்பாயும் உயரமாயும் மீசை வைத்துக் கொள்ளாமலும்" ஆகிய கதைகள் என்னை மிகவும் கவர்நதன.அப்பர் பெர்த்தில் சிதம்பரம் ரயிலில் தன்னோடு பயணித்த பெண்ணை கட்டியணைத்துவிட்டு சிந்திக்கும் இடம்,உயரமாயும் சிவப்பாயும் மீசை வைச்சுக் கொள்ளாமலும் கதையில் வரும் காதலுக்கு பின்னான உணர்வோட்டங்கள் மற்றும் ஒரு தற்கொலை சிறுகதையில் வரும் மாலைநேரத்து வானம் பற்றிய வர்ணனை எனது பேவரிட்.இவை மட்டுமல்ல ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் முக்கிய பாத்திரங்கள் தம் மனதைத் திறக்கும் வேளைகளில் அவர்களின் உணர்வுகளை அப்படியே மனக்கண் முன் படம்பிடித்துக் காட்டுகின்ற ஆதவனின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் ரசித்தேன். 

 
இச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற அனேக சிறுகதைகள் என்னை கவர்ந்தவை என்றாலும் ஒரு சில கதைகளில் ஆதவன் அவர்கள் உணர்வோட்டங்களை அதிக சிக்கலாக்கியிருப்பதாக எனக்குத் தோன்றியது.மற்றபடி இலக்கிய ஆர்வலர்க்கு ஆதவன் சிறுகதைகள் ஒரு அறுசுவை விருந்து என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

இன்னொரு பட்டாம்பூச்சி

இன்னொரு பட்டாம்பூச்சி - Ra. Ki. Rangarajan

பிரெஞ்சு கைதியான பிலிக்ஸ் மிலானி என்ற கைதி தனது சிறை அனுபவங்களைப் பற்றி எழுதிய Convict என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். இப்படி புத்தகத்தை வாசித்து முடித்த போது ஏதோ ஹொலிவூட் படத்தை பார்த்து முடித்தது போன்று உணர்ந்தேன். அந்தளவுக்கு திடீர் திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட மிகச் சுவாரசியமான புதினம் இந்நூல்.ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு கலக்கல்.இன்று நிறையப் படிக்க வேண்டி இருந்த போதும் இந்நூலை வாசித்து முடிக்காமல் பாடப்புத்தகத்தில் கைவைக்க மனம் ஒப்பவில்லை. உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே இந்நூல் என்று கூறப்பட்டுள்ள போதும் சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.இருந்தும் இம் மிகைப்படுத்தல்கள் புதினத்தை மேலும் சுவாரசியமானதாக மாற்றியிருப்பதால் அவற்றைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்கள்.உங்கள் எண்ணமும் பெரும்பாலும் என் எண்ணத்தை ஒத்திருக்கும் என்று நம்புகிறேன்

என் பெயர் எஸ்கோபர்-கிழக்கின் இன்னொரு குறைப்பிரசவம்

என் பெயர் எஸ்கோபர் - Pa.Raghavan

கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபரின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.பல் திருப்பங்களும் திடுக்கிடல்களும் நிறைந்தது.பா.ராகவன் எஸ்கோபரின் வாழ்க்கையை சாதாரணமாக எழுதியிருந்தாலே இந்நூல் மிகவும் சுவாரசியமானதாக அமைந்திருக்கும்.ஆனால் பாடி.ராவோ கதையை மேலும் சுவாரசியமாக்குகிறேன் பார் என்று இறங்கி பல இடங்களில் தேவையில்லாமல் புலம்பி கடுப்பேற்றுகிறார்.போதாக்குறைக்கு ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் பொருட்பிழைகளும் தலைகாட்டி நாங்களும் இருக்கிறோம் என்கின்றன.எஸ்கோபரைப் பற்றி நிறையைத் தகவல்களை உள்ளடக்கியிருந்தாலும் பாடி.ராவினதும் கிழக்கு பதிப்பத்தாரினதும் அலட்சியத்தால் குறைப்பிரசவமான குழந்தையாக எம் கைகளில் தவழ்கின்றது "என் பெயர் எஸ்கோபர்"

Paathi Raajyam

Paathi Raajyam - சுஜாதா சுஜாதாவின் ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு.2012 இல் ஒருமுறை வாசித்த இந்நூலை இன்று மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு விபத்தின் அனாடமி ஒரு கிளாசிக் குறுநாவல்.மற்றைய நான்கில் ஹொனலுலு மட்டும் சுமார் ரகம்.ஏனைய மூன்றும் வெவ்வேறு விதங்களில் என்னை கவர்ந்தன. வாசித்து முடிக்க இரண்டு மணி நேரம் போதும்.நேரமிருக்கும் போது ஒரு தடவை வாசித்துப் பார்க்கலாம்.

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள்

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள் - சுஜாதா என்னவோ தெரியவில்லை சுஜாதாவின் கட்டுரைகளில் எனக்கு ரொம்பப் பிரியம். சுஜாதா எளிய மொழி நடையில் நிறைய விஷயங்களை அலசுவதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விடயங்களை குழப்பமேற்படா வண்ணம் கட்டுரைகளில் இணைத்து கையாள்வதும் என்னை அதிகம் கவர்ந்தன.இந்நூலிலும் வாசகர்களை ஏமாற்றாத வகையில் பெரும்பாலான கட்டுரைகளை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.

காந்தி-காங்கிரஸ் துரோக வரலாறு

காந்தி-காங்கிரஸ் துரோக வரலாறு - Revolutionary Students & Youth Front

காந்தியையும் காங்கிரசையும் பற்றி வெளிவராத பல தகவல்களை ஆதாரத்துடன் விளக்குகின்றது இந்நூல்.காந்தி சொன்ன வார்த்தைகளின் மூலமே காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.எனினும் சில இடங்களில் சற்று மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் சேர்க்கப்படிருப்பதும் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற காலப்பகுதிகளின் நிலவிய சூழ்நிலைகளை பற்றி எதுவும் கூறாமல் காந்தியையும் காங்கிரசையும் முழுமையாக குற்றம்சாட்டும் பாணியில் எழுத்தப்பட்டிருப்பதும் மைனஸ்.

லெனின்

லெனின் - Marudhan நூலை லெனினின் பிறந்ததிலிருந்து ஆரம்பித்து காலக்கிரமமாக வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியிருக்கலாம். ஆனால் மருதனோ அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பித்து அலெக்சாண்டரின் தூக்கு,நரோத்னயா வோல்யா,லெனின் குடும்பம் ஸிம்பர்ஸ்க் நகரை விட்டு வெளியேறியமை என கால ஒழுங்கில் முதலில் நடந்த விடயங்களைப் பின்னாலும் பின்பு நடந்தவற்றை முன்னாலும் எழுதி குழப்பியடிக்கிறார்.முதல் மூன்று அத்தியாயங்களும் வாசித்து முடித்த பின்னர் சம்பவங்களை அவை நடைபெற்ற காலப்பகுதிகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்திப் பார்க்க முயன்றேன்.தலை லேசாக ஒருமுறை சுற்றியது.அடுத்துவரும் அத்தியாயங்களும் அவ்வளவு சிறப்பான முறையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது.லெனினின் வரலாற்றை அறிய விரும்புவோர் வேறு புத்தகங்களைத் தெரிவு செய்வது உகந்தது.

புதிய தமிழ்ச் சிறுகதைகள்

புதிய தமிழ்ச் சிறுகதைகள் - Ashokamitran
  • வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மருமகள் வாக்கு,நகரம்,நாற்காலி,அன்னியர்கள்,பகல் உறவுகள் போன்ற பல கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. எஸ்தர், மிலேச்சன் ஆகிய கதைகளில் ஆசிரியர் மையப்படுத்தும் கருத்துக்கள் எனக்கு சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தின. அம்பை, வண்ண நிலவனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இக் குழப்பங்கள் ஏதும் ஏற்படாதிருக்கக் கூடும்.

ஜோதி

ஜோதி - சுஜாதா ஜோதி என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் தான் ஜோதி.ஒருவனுடைய சமூக அந்தஸ்து அவனை எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து காக்கின்றது என்பதை இந் நாவலினூடாக சுட்டிக்காட்டியிருப்பார் சுஜாதா.நாவலின் இறுதிப்பகுதியில் சுஜாதாவும் என்டர் ஆகின்றார்.கதையின் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சப்பென்று ஆகிவிட்டது.கணேஷ்,வசந்த் மிஸ்ஸிங்.அதனால் வழமையான சுவாரசியமும் கொஞ்சம் மிஸ் ஆகின்றது.முடிவு யதார்த்தபூர்வமானது என்றாலும் திரில்லர் என்று ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகனுக்கு பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளித்திருக்கும் என்பது என் எண்ணம்.

அனிதா இளம மனைவி [Anita - Ilam Manaivi]

அனிதா இளம மனைவி [Anita - Ilam Manaivi] - சுஜாதா சுஜாதாவின் ஆரம்பகால த்ரில்லர்களில் ஒன்று.வேகமான கதை ஓட்டம்,திடீர்த் திருப்பங்கள் என் சுவாரசியமாக நகர்கிறது நாவல். கணேஷ் மட்டும் வருகிறார்.வசந்தைக் காணவில்லை.வசந்தின் வேலைகளில் ஒரு பாதியை கணேசும் மற்றைய பாதியை சுஜாதாவும் செய்தாலும் வசந்த் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.அனிதாவும் மோனிகாவும் கணேஷ் கணேஷ் என்று உருகி வழிவது சலிப்பூட்டியது.கணேஷின் ஹீரோயிசத்தையும் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருக்கலாம்.ஆரம்பகால நாவல் கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கின்றது.சுவாரசியத்துக்காக ஒரு தடவை வாசிக்கலாம்.

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam] - Madhan,  மதன் வெறும் 63 பக்கங்களில் எத்தனை கொலையாளிகள் , எத்தனை தகவல்கள் .மதனின் தேடல் பாராட்டத்தக்கது.அன்ட்ரே சிக்காடிலோ முதற் கொலை செய்தது 42 வயதில்.(40 என்றும் சொல்லப்படுகிறது)ஆனால் ஒரு இடத்தில் முதற் கொலை செய்தது 44 என்று குறிப்பிடுகிறார் மதன்.ஹிட்லர் கொலை செய்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் ஒரு கோடி அல்ல.இப்படி ஒரு சில தவறுகளை தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு அருமையான நூல்

வந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal]

வந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal] - Madhan, மதன் மொகலாய சரித்திரத்தை சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லும் நூல்.நடந்த சம்பவங்களை ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் வர்ணிக்கும் மதனின் எழுத்துகள் ரசிக்க வைத்தன.முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த திகதிகளைக் கூடக் குறிப்பிட்டிருக்கும் மதன் ஒரு வரலாற்று நூலை இந்தளவு சுவாரசியமாகக் கூட எழுதமுடியும் என்று மற்றைய எழுத்தாளர்களுக்கு எடுத்தியம்பியுள்ளார்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral] - Jayakanthan ஒருவரை ஒருவர் நேசிக்கும் கணவன்-மனைவியிடையே ஏற்படும் மனத்தாங்கல்களையும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழகாக வர்ணித்திருப்பார் ஜெயகாந்தன்.ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியே அவனது கதையில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வது தான்.இந் நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் வாசகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பாத்திரங்களை படைத்திருக்கின்றார் ஜெயகாந்தன்

24 ரூபாய் தீவு [24 rūpāy tīvu]

24 ரூபாய் தீவு [24 rūpāy tīvu] - சுஜாதா கொலை செய்யப்பட்ட பெண் ஒருத்தியின் டயறி ஒரு நிருபரிடம் கிடைக்கின்றது.அதனை சற்று நேரத்தில் தொலைத்துவிட்ட நிருபனுக்கும் அந்த டயறியைத் தேடி அலையும் கும்பலிற்குமிடயையேயான போராட்டத்தை சுவாரசியமாகச் சொல்லியிருப்பார் சுஜாதா.இடையிலேயே குற்றவாளி யார் என்று ஊகிக்க கூடியதாக இருப்பதனால் ஏற்படும் தொய்வை கணேஷ்-வசந்தின் வருகை தவிர்த்து விடுகின்றது.பிற்பகுதியில் கணேஷ்-வசந்த் கதையைப் புரட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எஞ்சியது.பெரும்பாலான சுஜாதாவின் நாவல்களைப் போல இந்நாவலின் கிளைமாக்சும் எனக்குப் பிடித்திருந்தது.

Vaaimaye Vellum

Vaaimaye Vellum - சுஜாதா சித்ரா என்ற மையப்பாத்திரத்தைச் சுற்றி ஏனைய பாத்திரங்களை உருவாக்கிய விதமும் கதையை சினிமாத் தன்மையாக இல்லாமல் இயல்பாக கொண்டு சென்ற விதமும் என்னைக் கவர்ந்திருந்தன.வினோத் என்ற கதாபாத்திரம் செயல்களிலாகட்டும் பேசும் வார்த்தைகளிலாகட்டும் சரி விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஒரு பணக்கார இளைஞனை எம் கண் முன்னே நிறுத்துகின்றது.சுஜாதாவின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைத்தன.இறுதியில் நித்தியாவிடம் முத்துசாமி பேசும் வார்த்தைகள் கிளாஸ்.என்னை மிகவும் கவர்ந்த நாவல்களில் இதுவும் ஒன்று